கனகாம்பரம்




"கனகாம்பரம் " என் வளரிளம் பருவத்திற்கு 
முன்பிருந்தே ரசிக்கப்பட்ட மலர் 
என் நினைவுகளில் நீடிக்கும் எத்தனையோ 
பெண்களின் பால்ய காலத்து 
அடையாளம் கனகாம்பரம் தான்

கால் படி பூ வாங்கி வாழை நாரில் தொடுத்து 
சோற்று டப்பாவில் எடுத்து வந்து 
பல்லால் கடித்து பகிர்ந்து கொண்ட என் 
பள்ளிக்கூட தோழிகளெள்ளாம் 
கனகாம்பரத்தை போலவே நினைவுகளில் 
இருந்து மெல்ல மெல்ல மறைகிறார்கள்.

திருவிழா நேரத்தில் முல்லை 
அரும்புகளை பின்னுக்கு தள்ளி முதல் 
இடம் பிடித்துவிடும் கனகாம்பரம்
எப்போதாவது போட்டி என்றால் 
அது டிசம்பர் பூவிடம் மட்டுமே.

கிராமத்து காதலின் நீங்காத
அடையளம் கனகாம்பரங்களே
பாவாடை சட்டைகள் பரிணாம வளர்ச்சி
பெற்று தாவணிகளாய் மாறிய போது 
தவறாமல் பின் தொடர்ந்த தனி மலர் 
இந்த கனகாம்பரம்.

எல்லா கலர் தாவணிக்கும் ஏக பொருத்தம் 
இந்த கனகப்பூ இது தாவணிகளுக்கென்றே 
பூக்கும் ஆச்சரிய பூ

எங்கள் கல்லூரி காலத்தில், தாவணிகளை 
போலவே சோகமாய் தொலைய தொடங்கியது 
கனகாம்பரங்கள்.

கான்கிரீட் காடுகளுக்குள் பூக்க மறுத்தது 
கனகாம்பரம் கன்டிஷனர் கூந்தலுக்கு 
பிளாஸ்டிக் பூக்கள் பொருந்திபோனது
கனகாம்பரங்கள் அன்னியமானது.

இன்று கதம்பங்களிள் கூட காணக்கிடைக்காத 
கனகாம்பரங்களை நினைக்கையில் 
ஒன்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது.
என் பிரியமான காதலிகளே இந்த கனகாம்பரங்களை 
ஒருமுறையாவது சூடிவிடுங்கள்,
கனகாம்பரம்   "தேவதைகளுக்கான மலர்"
                                     

கருத்துரையிடுக

2 கருத்துகள்