ஆணின் பிரசவ வலி

நாட்கள் தள்ளிப் போனதாய் 
நீ கூறியதும் நானும் 
கொஞ்சம் வெட்கப்பட்டேன்..

மருத்துவர் கூறிய அறிவுரைகளை 
எல்லாம் உன்னிலும் ஆர்வமாய் 
நானே கேட்டேன்..

வாந்தி வருவது வழக்கம் என்றாலும் 
நீ சோர்ந்து விடுவதால் நான் 
சோகத்தில் நின்றேன்..

பொருந்தாமல் போன உடைகளுக்காய்  
நீ வருந்தியபோது உன் 
எடை கூடிய அளவிற்கு தேடி
எடுத்து வந்தேன் எப்போதும் நீ 
ரசிக்கும் வெளிர்நீல சுடிதாரை...

பாக்கெட் பாலில் பவுடர் கலப்பதால் 
கறவை பால் தேடி கடை 
கடையாய் அலைந்தேன்..

இரும்புசத்து வேண்டுமாம் 
நாட்டு 
மாதுளைகளை தேடி வாங்குகிறேன்..

நிறத்தை பற்றி நினைத்ததே இல்லை 
குங்குமப்பூவை மறந்துவிட்டேன்..

புரதச்சத்து தேவை என்பதால்  
விரால் மீன் தேடி அதிகம் அலைகிறேன்..

உனக்கு பிடித்த நாட்டு கொய்யா, 
இலந்த வடை,  திரட்டுப்பால், 
ஆற்று இரால், ரவா தோசை,  
தேன் மிட்டாய் எனத் தேடி 
வாங்குகிறேன் கிடைக்காமல் போனது
கொடுக்காப்புளி மட்டுமே..

நீ களைத்துப் போகும் 
தருணங்களில் எல்லாம்
தவறாமல் தோள் கொடுக்கிறேன்..

நீ கண்ணயரும் வேலையில் 
எழுப்பாமல் காத்திருக்கிறேன்..

பற்றிய என் கரங்களை 
விடாமலேயே தொடர்கிறாய் 
நடைபயிற்சியை..

தூக்கம் தொலைந்து போன 
உன்  முன் இரவுகளில் 
சொல்வதற்கென்றே தீராத 
பெருங் கதைகளை சேர்த்து வைக்கிறேன்..

அவ்வப்போது உணரும் சிசுவின் 
அசைவுகளில் நீ பரவசப்படும் 
போதெல்லாம் நான் முத்தங்களையே 
 பரிசளிக்கிறேன்...
 
மீளாத சுகங்களோடு   நீீீண்ட
 
ஒரு பின்னிரவில் அடிவயிற்றில் 
வலி என்றபோது நான் 
அலறி அழுதே விட்டேன்...

கதறும் வலியோடு என் கைகளைப் 
பற்றியபடி பிரசவ அறைக்குள் நுழைந்தாய்..

இப்போது நினைக்கிறேன் 
இந்த தாளாத பெருவலியை
தாங்கித்தான் பெறவேண்டுமென்றால்
"தள்ளியே படுத்திருப்பேன்" 
அந்த ஒரு இரவில்

கருத்துரையிடுக

4 கருத்துகள்